ஞாயிறு, டிசம்பர் 29, 2013

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை (3ஆம் பாகம்)




இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மாதம் ரபி உல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை அன்று  தான் கண்மணியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலை ஃ பஜர் பிறகு மரணித்தார்கள் . அவர்கள் வாழ்ந்த அந்த அற்புதமான வாழ்க்கையை எழுத அல்லாஹ் கொடுத்த ஒரு பெரிய பாக்கியம் என்றுதான் நான் கருதுகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விட்டு போன இரண்டு விஷயங்கள் அவைகளை நாம் பற்றிப் பிடித்து வாழ வேண்டும் , ஒன்று அல்லாஹ்வின் திரு வேதம் மற்றொன்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்பக் காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால்  அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை  செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக ) அவர்களிடம் கொண்டு வரப்படும் ." இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா ? " என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள் . ஆம் எனக் கூறப்பட்டால் " கடனை நிறைவேற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா ? " எனக் கேட்பார்கள். ஆம் என்றால் அவருக்காக பிரார்த்தனை செய்வார்கள் . இல்லை எனக் கூறப்பட்டால் " உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் " என்று கூறி விடுவார்கள் . அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது " இறை நம்பிக்கையார்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொருப்பாளியாவேன். எனவே  , யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு . யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும் " என்று கூறலானார்கள் .
நூல் புகாரி .

குடிமக்கள் வாங்காத கடனை குடிமக்கள் தலையில் கட்டுகிற அரசுகளை  நாம் பார்த்துள்ளோம் . ஊதாரித்தனமாக செலவு செய்வதற்காக பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி மக்களின் வரிப்பணத்தில் வட்டி கட்டும் ஆட்சிகளை நாம் பார்க்கிறோம். மக்கள் வாங்கிய கடனுக்காக மக்களிடம் வட்டி வசூலிக்கும் ஆட்சியையும் , வட்டிக் கட்டத் தவறினால் ஜப்தி  செய்யும் தண்டல்கார அரசுகளையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு கடன் பட்டிருந்தாலும், என்ன காரணத்துக்காக கடன் பட்டிருந்தாலும்  அந்தக் கடன்கள் அனைத்தையும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அடைத்தார்கள் . இவ்வாறு அடைப்பது என்றால் அளவுக்கு அதிகமாக செல்வம் குவிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைக்கு மிகப் பெரிய பணக்கார நாடுகளாக கருதப்படும் நாடுகள் தங்கள் குடிமக்களின் கடன்களை அடைக்க  முன் வந்தால் பிச்சைக்கார நாடுகளாகி விடும்.

குடிமக்கள் ஒவ்வொருவரின் கடனையும் அரசே அடைத்து அற்புத ஆட்சியை செழிப்பு  மிக்க ஆட்சியைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடத்தினார்கள்.

வீரம் நிறைந்த பலருடைய வரலாறுகளை நாம் அறிந்திருக்கிறோம் . அவர்களின் வீரத்திற்கும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீரத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடிருக்கிறது .

அன்பு, இறக்கம், வள்ளல் தன்மை போன்ற பண்புகளைக் கொண்டவர்கள் மென்மையான சுபாவம் உடையோராக இருப்பதால் அவர்களிடம் வீரத்தைக் காண முடியாது . வீரர்கள் என  அறியப்பட்டோரிடம் இரக்கத்தையும் , மென்மையான சுபாவத்தையும் காண முடியாது . ஆனால், மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லவர்களிடமும் , பொதுமக்களிடமும் மென்மையாக நடக்கும் வேளையில் களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் போது , மாவீரராகத்  திகழ்ந்தார் என்பது மற்ற வீரர்களிடம் இல்லாத தனிச்சிறப்பாகும் .

அன்றுமுதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர் .சில குடும்பங்களில் இதற்க்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை.

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடம்  நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதரியாகத் திகழ்கிறது .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் ? என்று ஆயிஷா (ரலி) யிடம் நான் கேட்டேன் . அதற்கவர் , தமது குடும்பத்தினரின் பணிகளில்  ஈடுபடுவார்கள் . தொழுகை நேரம் வந்தால் தொழுகைக்காக  புறப்படுவார்கள்  என விடையளித்தார் .
அறிவிப்பவர் : அஸ்வத் ,
நூல்: புகாரி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும் , தமது மனைவியர் செய்யும் வேளைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பதும் தெரிகிறது.

என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) வருவார்கள் . அவர்களைக் கண்டதும்  எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள் . என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார் .

நூல் புகாரி.

எளிமையான வாழ்க்கை!
ஏழ்மையில் பரம திருப்தி !
எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!
அநியாயத்திற்கு அஞ்சாமை !
துணிவு!
வீரம்!
அனைவரையும் சமமாக மதித்தல்!
மிக உயர்ந்த இடத்தில் இருந்ததும் வர்கள் காட்டிய அடக்கம்!
பணிவு !
எல்லையற்ற பொறுமை!
மென்மையான போக்கு !
உழைத்து உண்ணுதல்!
கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி!
தாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டியது!
எதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்தல்!
தமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் சொத்தையும் சேர்த்துச் செல்லாதது !
தமது உடமைகள் அனைத்தையும்  அரசுக் கருவூலத்தில் சேர்த்தது!
அரசின் ஸகாத் நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்திலும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டது!
மனைவியருடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தியது!
சிறுவர்களிடம் அன்பு காட்டுதல் !
என அனைத்துப் பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள் .

இப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியாது என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடம் இவற்றைக் காண முடியாது.

இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறார்கள் . உலகம் அவர்களை மாமனிதர் என்று புகழ்ந்து போற்றுகிறது.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நாம் அதிகம் அதிகம் ஸலவாத் கூறுவோம்! அவர்கள் காட்டிய வழிகளில் நாம் பின்தொடருவோம் ! அவர்கள் சொல்லாத ஒன்றையும் ,செய்யாத ஒன்றையும் நாம் ஒருகாலும் செய்ய மாட்டோம்!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ............ சுர்க்கமான முறையில் தந்துள்ளேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!