வெள்ளி, பிப்ரவரி 05, 2016

ஸலாம் சொல்வதின் சிறப்பு

ஸலாம் சொல்வதின் சிறப்பு
இஸ்லாமிய சமூகத்தின் தனித்தன்மையான பண்பாடுகளில் ஸலாமைப் பரப்புவதும் ஒன்றாகும். ஸலாம்  என்பது பல்வேறு காலங்களில் மனிதர்களிடையே தற்செயலாக உருவாகி  கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் சடங்கைப் போன்ற சடங்கல்ல.

மாறாக, உறுதியான அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட உயர்ந்த ஒழுக்கப் பண்பாகும். புகழுக்குரிய இரட்சகன் தனது திருமறையில் இது குறித்து உத்தரவிடுகிறான். இது விஷயத்தில் ஹதீஸ் கலை நிபுணர்கள் 'கிதாபுஸ் ஸலாம் ' என்ற பெயரில் ஸலாமைப்  பற்றிய நபிமொழிகளை தொகுக்குமளவு நபிமொழிகள் நிறைந்து காணப்படுகின்றன.


திருக்குர் ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்..

விசுவாசிகளே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் [நுழையக் கருதினால்] அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி [அவர்களுடைய] அனுமதியைப் பெறாத வரையில் நுழையாதீர்கள். [அல்குர் ஆன் 24..27]

மேலும் ஸலாம்  கூறப்பட்டால் அதைப் போன்றோ அல்லது அதைவிட அழகிய முறையிலோ பதில் கூற வேண்டுமென அல்லாஹ்  உத்தரவிடுகிறான்.

[எவராலும்] உங்களுக்கு முகமன் [ஸலாம் ] கூறப்பெற்றால் [அதற்குப் பிரதியாக] அதை விட அழகான [வாக்கியத்]தைக் கூறுங்கள் அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள்.    [அல்குர் ஆன் 4..86]

நாம் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம்  கூறி அதைப் பரப்ப வேண்டுமென்பதை வலியுறுத்தும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னு ஆஸ் [ரலி] அறிவிப்பதாவது.. நபி [ஸல்] அவர்களிடம் ஒரு மனிதர், ''இஸ்லாமில் சிறந்தது எது? என்று கேட்டார். நபி [ஸல்] அவர்கள் , [ஏழைகளுக்கு] உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம்  கூறுவது'' என்று கூறினார்கள்.
ஆதாரம்.. சஹீஹூல் புகாரி , முஸ்லிம்]

நபி [ஸல்] அவர்கள் ஸலாமின்  முக்கியத்துவம் கருதி அதைக் கடைபிடிக்க வேண்டுமென ஆர்வமூட்டினார்கள்.  அந்த ஸலாமின்  மூலம் இதயங்கள் இணைகின்றன. மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்குகின்றன. அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

இன்று நாம் பார்க்கின்றோம்.  சில அமைப்புகள் மற்ற அமைப்பில் உள்ள சகோதர்களிடம்  ஸலாம்  கூறுவது கிடையாது. இவர் அவர் முகத்தை பார்த்து திருப்பிக் கொண்டு போவார். இப்படி தான் பெரும்பாலும் நடக்கிறது. ஒரு தௌஹீத் சகோதரர் இன்னொரு  சுன்னத் ஜமாஅத் சகோதரரைக் கண்டால் ஸலாம்  கூறமாட்டார். ஒருவர்கொருவர் பார்த்தும் பாக்காமலும் சென்றுக் கொண்டிருப்பார்கள். இதுதான் இன்று நடந்துக் கொண்டிருக்கிறது. ஸலாம்  கூறுவது சுன்னத் [நபிவழி] பதில் கூறுவது ஃபர்லு . மேலே கூறப்பட்ட அல்லாஹ்வின் திருவசனத்தைப் பாருங்கள்!

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ  அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனம் புகமாட்டீர்கள். நீங்கள்  ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா  ? அதை நீங்கள் செய்தால் உங்களிடையே நேசம் உண்டாகும். உங்களிடையே ஸலாமைப்  பரப்புங்கள்.''
ஆதாரம்.. சஹீஹ் முஸ்லிம்]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''அல்லாஹ்விடம் மனிதர்களில் சிறந்தவர் யாரெனில் அவர்களில் ஸலாமை  முந்திச்  சொல்பவரே!''
ஆதாரம்.. அபூதாவூத்]

இன்ஷாஅல்லாஹ்  இனி வரும் காலங்களில் நாம் எல்லோருக்கும் ஸலாம்  கூறுவோம்! அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று பார்க்காமல். இவர் அந்த ஜமாஅத் . இவர் இந்த  ஜாமத்  என்று பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் முஸ்லிம் சகோதரர்கள்.  கருத்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும் . நேசம் நம் உள்ளத்தில் இருக்கட்டும்!

அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம் /சுவனப்பாதை .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!