வெள்ளி, அக்டோபர் 07, 2016

சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.[தொடர் 2]

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.[தொடர் 2]

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்..
கண் ஒளி பெற்ற  அரசவையைச் சேர்ந்தவர் அரசவைக்கு கொண்டு வரப்பட்டு நீ உமது மார்க்கத்தை விட்டு விலகி விடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுக்கப்பட்டது . அவரும் இரண்டு துண்டாகக்  கீழே விழுந்தார். பின்னர் அச்சிறுவர் கொண்டு வரப்பட்டு உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிடவே, உடனே அரசர் தமது ஆட்களில் சிலரை அழைத்து இவரை இன்ன மலையின் உச்சிக்குக்  கொண்டு செல்லுங்கள்! அம்  மலையின் உச்சியை நீங்கள் அடைந்ததும், அவர் தம் மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் அவரை விட்டு விடுங்கள்! இல்லையென்றால் அவரை அங்கிருந்து தூக்கி வீசி எரிந்து விடுங்கள்! என்று கூறினார்.


அவர்கள் அச்சிறுவரை இழுத்துச் சென்று மலையின் உச்சியில் ஏற்றினார்கள். அப்பொழுது அவர் இறைவா! நீ ! நாடியதைக் கொண்டு இவர்களை விட்டும் என்னைப்  பாதுகாப்பாயாக!'' என துஆச் செய்தார். உடனே மலையில் கால் வழுக்கி அவர்கள் கீழே விழுந்தார்கள். பின்னர் சிறுவர் அரசரிடம் நடந்து வந்தார். அவரைப் பார்த்த அரசர் உம்  தோழர்கள் [உம்முடன் வந்த நம் ஆட்கள்] என்ன ஆனார்கள்?'' என்று கேட்டார். அதற்கவர் அவர்களை விட்டும் அல்லாஹ் என்னைக் காப்பாற்றி விட்டான் என்று கூறினார்.

அரசர் அச்சிறுவரைத் தம் ஆட்கள் சிலரிடம் [மீண்டும்] ஒப்படைத்து ஒரு கப்பலில் ஏற்றி இவரை நடுக்கடலுக்கு கொண்டு செல்லுங்கள்! அவர் அப்பொழுது மனம் திருந்தி தனது மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் , அவரை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால் அவரைக் கடலில் வீசி எரிந்து விடுங்கள்! என்று கூறினார்.  [அதன்படி நடுக்கடலுக்கு அச்சிறுவர் அழைத்துச் செல்லப்பட்டார்] அப்பொழுது அவர்  ''இறைவா! நீ நாடியதைக் கொண்டு இவர்களை விட்டும் என்னைப்  பாதுகாப்பாயாக! என்று கூறினார். அதன்படி கப்பல் மூழ்க ஆரம்பித்தது. அரசரின் ஆட்கள் [மட்டும்] தண்ணீரில் மூழ்கினர். பிறகு சிறுவர் அரசரிடம் வந்தார். அரசர், '' உம்  தோழர்கள் [உம்முடன் வந்த நம் ஆட்கள்] என்ன ஆனார்கள்? என்று கேட்டார். அதற்கவர் அல்லாஹ் அவர்களை விட்டும் என்னைக் காப்பாற்றி விட்டான்.'' என்று கூறினார். பின்னர் கூறினார்,,  ''அரசரே! உமக்கு நான் ஏவுவது போல் நீர் செய்யாத வரை என்னை நீர் கொல்லமுடியாது ,'' என்று கூறினார். அது என்ன? என்று அரசர் கேட்டார். அதற்கவர் நீர் எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, என்னை ஒரு மரத்தில் கட்டி பிறகு எனது அம்புப் பையிலிருந்து ஓர் அம்பை எடுத்து அதனை வில்லின் நடுவில் வைத்து பின்னர்   ''பிஸ்மில்லாஹி ரப்பில் குலாமி '' [இச்சிறுவனின் இரட்சகனான  அல்லாஹ்வின் திருப்பெயரால்] என்று கூறி என் மீது அம்பை எறிவீராக ! அவ்வாறு செய்தால் என்னைக் கொன்று விடலாம்! என்று கூறினார். அதன்படி அரசர் மக்களை ஒரிடத்தில்  ஒன்று திரட்டி ஒரு மரக்கிளையில் அச்சிறுவரைக் கட்டிப் பின்னர் அவரது அம்புப் பையில் இருந்து ஓர் அம்பை எடுத்து வில்லின்  மத்தியில் வைத்து  ''பிஸ்மில்லாஹி ரப்பில் குலாமி'' என்று எய்தார். அந்த அம்பு அவரது நெற்றிப்  பொட்டில் பட்டது. [உடனே] அவர் தம் கையை நெற்றிப்  பொட்டில் வைத்தார். அவர் இறந்துவிட்டார். உடனே மக்கள், இச்சிறுவரையுடைய இரட்சகன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம், என்று கூறினர்  அப்பொழுது அரசரிடம் சிலர் வந்து நீர் எதனை அஞ்சினீரோ அது அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிகழ்ந்து விட்டது. மக்கள் ஈமான் கொண்டு விட்டனர் என்று கூறினர் . உடனே அரசர் பாதைகளின் வாயில்களில் [தெருமுனைகளில்] குழிகளைத் தோன்றுமாறு கட்டளையிட்டார். அதில் நெருப்பு மூட்டப்பட்டது . பின்னர் யார் தம் [புதிய] மார்க்கத்தை விட்டு விலகவில்லையோ  அவரை இந்நெருப்புக் குழியில் போடுங்கள் என்றார். [அறிவிப்பாளர் கூறுகிறார்] அல்லது [புதிய] மார்க்கத்தை விட்டு விலகாதவரை   நோக்கி இக்குழியில் விழுவீராக எனக் கூறப்பட்டது. அவர்களும் அவ்வாறே செய்தார்கள் . [இறுதியாக] ஒரு பெண்மணி தம் குழந்தையுடன் வந்தாள் . அந்த நெருப்புக்  குண்டத்தில் விழுவதற்கு அஞ்சினாள் . அதற்கு அவள் குழந்தை,  ''தாயே! நீ பொறுமை கொள்வாயாக! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கிறாய்'' என்று கூறியது.
நூல் .. முஸ்லிம் ]

விளக்கவுரை..
மிகக்  கடுமையான சோதனையிலும், வேதனையிலும் பொறுமையை மேற்கொண்டு சிறுவர், துறவி, அரசவையைச் சேர்ந்தவர், பொதுமக்கள் ஆகியோர் தங்கள் உண்மை இரட்சகனான அல்லாஹ்வின் மீதே ஈமான் கொண்டு அதில் உறுதியாக இருந்தனர் என்பதை மேற்காணும் ஹதீஸ் எடுத்துரைக்கிறது.
வரும் காலங்களிலே நிறைய குழப்பங்களும், சோதனைகளும், வேதனைகளும் வரும்  . நாம் உறுதியாக அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு பொறுமையாக இருக்க இந்த ஹதீஸ் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!